Monday, September 30, 2013

கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் விருந்து அட்டவணை,
‘அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி
சாம்பார் கூட்டுத் தயிர்புளி சோரி
சேனை ஏத்தன் சேர்த்தொரிசோரி
பருப்புப் பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யொரு போளியும் பருப்பு வடையும்”

Friday, September 27, 2013

பராக்கு

பராக்கு' என்பது ஆழமான பொருள் கொண்ட சொல். ஆனால் சாதா
வழக்கிற்கு வந்துவிட்டது. 'சும்மா' என்னும் சொல் போல.
இச்சொல்லும் யோகநூலில் காணப்படுவதுதான்.
'பரா அக்' என்பது வெளிப்பார்வை.
'ப்ரத்யக்' என்பது உள்பார்வை.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமத்தில்,

'பரா ப்ரத்யக் சிதி ரூபா பச்யந்தி பரதேவதா
மத்யமா வைகரீரூபா பக்த மானஸ ஹம்ஸிகா'

என்ற மந்திரத்தொடரில் இந்த இரு சொற்களும் வருகின்றன.

தன்னையே அறிதல், மனதை நிலை நிறுத்தல், மனதை அழித்தல்
ஆகியவற்றைச் செய்வதற்கு பரத்யக் மிக அவசியம்.
கள்ளனேன் கள்ளத்தொண்டாய்க் காலத்தைக் கழித்தே போக்கித்
தெள்ளியனாகி நின்று தேடினேன்; நாடிக் கண்டேன்.
உள்குவார் உள்கிற்றெல்லாம் உடனிருந்தறிதி என்று
வெளிகினேன் வெள்கலோடும் விலாவிறச் சிரித்திட்டேனே!

என்னும் பாடல் அப்பர் பெருமான் பாடியது. இதனை ஏற்கனவே விளக்கி
யுள்ளேன்.
இறைவனைத் தன்னுள்ளேயே அப்பர் பெருமான் கண்டு கொண்டார்.
ஆனால் அதற்கு முன் அவர் வெளியில்தான் இறைவனைத் தேடியிருக்கிறார்.
அவ்வாறு அவர் வெளிப்பார்வையாக பார்த்துக்கொண்டிருந்ததுதான்
பராக்கு.
அப்பேற்பட்ட சொல்!
இலக்கு இல்லாமல் வெளிப்பார்வை பார்ப்பதையும், விளையாட்டாகப்
வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதையும் 'பராக்கு'ப் பார்த்தல் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது.

இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லலாம்.
திருமந்திரத்தில்,

இராப்பகல் அற்ற இடத்தே இருந்து
பராக்கற ஆனந்தத் தேன் பருகார்
இராப்பகல் அற்ற இறையடி இன்பத்து
இராப்பகல் மாயை இரண்டிடத்தேனே.

இந்தப் பாடலில் இரண்டாம் அடியில் வரும், 'பராக்கு அற' என்பதில்
பராக்கு வருகிறது.

அன்புடன்

ஜெயபாரதி

Tuesday, September 3, 2013

64 கலைகள்

ஆய கலைகள் அறுபத்துநான்கும் ஏய உணர்விக்கும் என்றெல்லாம் சொல்லப்படுகிறதே.. அந்த 64 கலைகளும் எவை என உங்களுக்குத்தெரியுமா? இதோ உங்களுக்காக :
1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

Monday, September 2, 2013

Classical Literature

அன்பர்களே,

இந்த உலகிலேயே மிக அதிகமான Classical Literature - பாடல்கள்,
பெருங்காப்பியங்கள், சிறு காப்பியங்கள், பிரபந்தங்கள், தனிப்பாடல்கள்
போன்றவை மிக அதிகமாக உள்ள மொழிகளில் தமிழ், முதல் இரண்டு மூன்று ஸ்தானங்களுக்குள்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
ஸமஸ்கிருதத்திலும் ஏராளமாக இருக்கின்றன என்பதுவும் அறிந்த
விஷயம்தான்.
கந்தபுராணத்தில் மட்டுமே ஓர் இலட்சத்து இருபதினாயிரம் கிரந்தங்கள், மஹாபாரதத்தில் ஓர் இலட்சம் கிரந்தங்கள், வால்மீகி ராமாயணத்தில் இருபத்து நான்காயிரம் என்று ஏராளமாக இருக்கின்றன.
தமிழை எடுத்துக்கொள்வோம்.
இதுவரை அறியப்பட்ட பாடல்கள் மட்டுமே பல லட்சங்கள் இருக்கும்போல தோன்றுகிறது. மறைந்து போனவை, அழிந்துபோனவை, அழிக்கப்பட்டவை போன்ற பாடல்களும் லட்சக்கணக்கில் இருக்கவேண்டும்.
முதற் சங்கம், இரண்டாம் சங்கம் ஆகியவற்றில் தொல்காப்பியத்தைத் தவிர மற்ற நூல்கள் கிடைக்கவில்லை. முத்தமிழில் நாடகத் தமிழ் சம்பந்தமான நூல்கள் ஏதும் கிடைக்கவில்லை.
சில பாடல்களின் பகுதிகள் வேறு நூல்களில் குறிப்புகளாகவும் எடுத்துக்காட்டுக்களாகவும் காணப்படும். அவற்றில் முழுநூல்கள் இல்லை. சில நூல்கள் வழிநூல்களாக இருக்கும். இப்போது வில்லிப்புத்தூரார் இயற்றிய வில்லி பாரதம் இருக்கிறது. ஆனால் பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய மாபாரதம் கிடைக்கவில்லை. பாரதம் பாடிய பெருந்தேவனார்களே அதே பெயரில் இரண்டு பேர்
இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் சங்க காலத்தைச் சேர்ந்தவர். இருவருடைய பாரதமும் இப்போது இல்லை.
பிற்காலத்தில்கூட பல புலவர்கள் - ஆதரிப்பற்றோர் அருகிவிட்ட
நிலையிலும்கூட - நிறைய எழுதியிருக்கிறார்கள்.
பிற்காலத்திலும்கூட இயற்றப்பட்ட பல நூல்கள்/பாடல்கள் மறைந்துதான் போய்விட்டிருக்கின்
றன.
எத்தனையோ புலவர்கள் இயற்றிய நூல்களின் பெயர்கள் கிடைக்கின்றன. நூல்கள் இல்லை. தனிப்பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
புலவர் ஒருவர் - நல்ல பிள்ளை என்ற பெயர். பிள்ளை என்பது ஜாதிப்
பட்டமாக இருக்கலாம். நல்லாப்பிள்ளை என்பவர் இன்னொருவர்.
நல்ல பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் -

1. வருமுருகாற்றுப்படை
2. சுருக்கத் திருமுருகாற்றுப்படை
3. அணிமுருகாற்றுப்படை
4. நன்முருகாற்றுப்படை
5. சத்தகோடி மகாமந்திரத் திருப்புகழ்
6. சிவசுப்பிரமணியர் கவசம்
7. பழனி இடும்பேசர் துதி
8. சிறை வீடு அந்தாதி

முருகாற்றுப் படையிலேயே நான்கு ஆற்றுப்படைகள், கவசத்தில் ஒன்று, திருப்புகழில் ஒன்று, துதியில் ஒன்று, அந்தாதியில் ஒன்று.
'சத்தகோடி மகாமந்திரத் திருப்புகழ்' சிந்தனையைத் தூண்டுகின்றது.
முருகனுக்கு உரியவை எழுகோடி மந்திரங்கள்.

"தரணிதனில் ஆறுபத்தறு கோடி தீர்த்தமுன் சரவணத்துள் அடக்கம்
சாற்றுமொரு எழுகோடி மந்திரங்கள் உந்தன் சடாட்சரத்துள் அடக்கம்..."

இவற்றின் பெயரால் ஒரு திருப்புகழ் என்றால் அது ஓர் அரிய நூலாகத்தான் இருக்கவேண்டும்.
அச்சில் வந்ததா, எங்கும் இன்னும் இருக்கின்றதா....?
எதுவும் தெரியவில்லை.

அன்புடன்

ஜெயபாரதி