Wednesday, October 23, 2013

ராமராஜ்யமும் தர்மயுத்தங்களும்

சோழர்கள் காலத்தில் ராமராஜ்யமும் தர்மயுத்தங்களும் நிலவின என்று 
நம்ம தமிழாட்கள் நம்புகின்றனர். இதுவும் Chauvinism, Jingoism ஆகியவற்றைச் சேர்ந்தவைதாம்.
பெரும்பான்மையான தமிழர்கள் அறிந்த விஷயம் - சாளுக்கியப் பேரரசர் 
புலிகேசியின் தலைநகராகிய வாதாபியை பல்லவச் சக்கரவர்த்தி நரசிம்மவர்மர் 
கொள்ளையிட்டு எரித்து அழித்ததுதான். 
ஆனால் அந்த மாதிரி கொள்ளையடித்து, நெருப்பிட்டு அழிப்பது என்பது 
நம்ம தமிழ் மன்னர்களுக்கு ஒரு பிறவிக்குணமாகவே இருந்திருக்கிறது. 
இதை அவர்களின் சாசனங்களிலிருந்தும் எதிரி நாட்டினரின் 
குறிப்புகளிலிருந்தும், அகழ்வாராய்ச்சிகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும் 
நன்கு அறியலாம்.
சில உதாரணங்களைப் பார்ப்போம்......
சாளுக்கியர்களின் தலைநகரமாக விளங்கியது வாதாபி. அதை நரசிம்மவர்மப் பல்லவர் அழித்தார். 
அதன் பின்னர் மான்யகேடம் என்னும் பெருநகரை விரிவாக்கி அழகுபடுத்தி 
சாளுக்கியர்களின் அடுத்த தலைநகரமாக ஆக்கிக்கொண்டனர். இது 
சாளுக்கியர்களுக்குப் பின்னர் வந்த ராஷ்டிரகூடர்களுக்கும் தலைநகராக 
விளங்கியது. 
ராஷ்டிரகூடர்களுக்குப் பின்னர் மேலைச் சாளுக்கியர்கள் பேரரசை 
நிறுவிக்கொண்டனர். அவர்களுக்கும் மான்யகேடமே தலைநகரமாக இருந்தது.
அந்த மாநகரத்தை ராஜராஜசோழர் கொளுத்திவிட்டார். 
ஆகவே மேலைச் சாளுக்கியர்கள் கல்யாணபுரம் என்னும் நகரைத் 
தங்களின் ராஜதானியாக ஆக்கிக்கொண்டனர்.
அடுத்து வந்த சாளுக்கிய மன்னனாகிய ஆகவமல்ல சோமேசுவரரர் 
கல்யாணபுரத்தை விரிவாக்கி, அழகிய கட்டடங்கள் பலவற்றைக் கட்டி, அதை 
ஒரு பெரும் நகரமாக ஆக்கினார். உலகின் அழகிய சிறந்த நகரங்களில் 
ஒன்றாகக் கல்யாணபுரம் விளங்கியது. 
ராஜேந்திர சோழரின் இறுதிக்காலம் நெருங்கும்போது ஆகவமல்லர் 
ஒரு பெரும்படையுடன் சோழநாட்டுக்குள் நுழையப் பார்த்தார். 
ராஜேந்திர சோழரின் மகனாகிய ராஜாதிராஜர், அவரைத் தடுத்து 
நிறுத்தியதுடன் சாளுக்கிய நாட்டுக்குள் அவரை ஓட்டிவிட்டுக் கொள்ளிப்
பாக்கை என்னும் பெரு நகரத்தைக் கொளுத்தினார். 

ராஜேந்திரருக்குப் பின்னர் ராஜாதிராஜர் 1044-இல் சக்கரவர்த்தி 
ஆகியவுடன் 1946-இல் சாளுக்கியர்களின்மீது படையெடுத்தார். இம்முறை 
கம்ப்பிலி என்னும் நகரத்தைக் கொளுத்தி, வெற்றிக்கம்பம் நாட்டினார். 
1048-ஆம் ஆண்டில் மற்றுமொரு படையெடுப்பை நிகழ்த்தி பூண்டூர், 
மண்ணதி என்னும் இரு பெரும் நகரங்களைப் பாழாக்கினார். 
குஜராத் வரைக்கும் சென்று பல போர்களிலும் சாளுக்கியர்களை வென்று அந்த நாட்டின் பகுதிகளில் அழிவு வேலையைச் செய்தார்.
அதன்பின்னர் மீண்டும் ஒரு பெரும்போரை நடத்தினார். 
அதில் சாளுக்கிய நாட்டின் உள்ளுக்குள் சென்று சாளுக்கியர்களின் 
தலைநகரமாகிய கல்யாணபுரத்தைக் கைப்பற்றினார். 
அதை நெருப்பிட்டு அழித்தார். 
அந்த நகரத்தைச் சூறையாடி பல பொருள்களைக் கொண்டுவந்தார். 
அந்த நகரின் கோயில்கள் ஒன்றிலிருந்த அழகிய துவாரபலாகர் சிலையொன்றும் 
கொண்டுவரப்பட்டது.
அந்தச் சிலையின் பீடத்தில் 'சிரீ ஸ்வஸ்திசிரீ உடையார் விசய ராசேந்திர தேவர் கலியாணபுரமெறிந்து கொண்டுவந்த துவாரபாலர்' என்று பொறிக்கப் பட்டிருக்கிறது'. 
ஆயிரக்கணக்கான குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் முதலியவற்றைக் கைப்பற்றினார்.
இது ஒரு சிறு துளி. 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பல்யாகசாலை முதுகுடுமிப் 
பெருவழுதிப் பாண்டியர், சேரன் செங்குட்டுவன் முதலியவர்கள் இந்த மாதிரி 
அழிவு வேலைகளையெல்லாம் செய்திருக்கின்றனர்.
இந்தியத்துணைக் கண்டத்தில் மட்டுமல்ல......
கடல் கடந்து வந்தும் அந்த மாதிரிப்பட்ட பேரழிவுகளைச் செய்து 
கொள்ளையும் அடித்திருக்கின்றனர்.
தர்மயுத்தமாவது........?

No comments:

Post a Comment